’படம் பண்ற பொழைப்பைப் பாத்துட்டு பணம், துட்டு, மணி சம்பாதிச்சி
செட்டில் ஆகுற வழியைப் பாருங்க பாஸ். இனிமே ப்ளாக் எழுதுறேன். சினிமா
விமரிசனம் எழுதுறேன்னு சிக்கி சீரழிஞ்சி சின்னாபின்னமாகாதீங்க’-
இப்படி சில நண்பர்களிடமிருந்து ‘அழுத்தமான’ ஆலோசனைகள்
கடந்த சில தினங்களாய் எதிர்கொண்டு வருகிறேன்.
அதற்கெல்லாம் எனது பதிலாய் அமைந்தது மய்யமான ஒரு சிரிப்பு
மட்டுமே. அந்த மய்யமான சிரிப்புக்கான அர்த்தத்தை ஒரு ஓரமாய் வைத்துவிட்டு ‘சிநேகாவின்
காதலர்கள்’ குறித்த 5 வது பதிவினை தொடர்கிறேன்.
இணையத்தின் மூலம் நடிகர்கள் மற்றும் உதவி இயக்குனர்களை இணைத்துக்கொள்வது
குறித்து எழுதியிருந்த பதிவினை, எனது வேண்டுகோளை ஏற்று, சில அன்பு
நண்பர்கள் பகிர்ந்திருந்ததால், அநியாய ரெஸ்பான்ஸ்.
நடிக்க வாய்ப்புக்கேட்டு நூற்றுக்கணக்கானோர், உதவி இயக்குனர்
வாய்ப்புக்கேட்டு சுமார் 50 பேர் மற்றும் பாடலாசிரியர்கள், இவர்களையெல்லாம்
தாண்டி, ஒரு பிரில்லியண்ட் மேன் ஸ்ட்ரெயிட்டாக இயக்குனர் வாய்ப்பே கேட்டும், சுவாரசியமான
பல மெயில்கள் வந்திருந்தன.
அவற்றில் சிலவற்றிற்கு மட்டுமே பதில் போட்டேன். மற்றவற்றிற்கு
பதில் அளிக்கவில்லை. காரணம் அவை அத்தனையுமே ஒரு அவசர இங்கிலீஸில் அடிப்படை விபரங்கள்
கூட இல்லாமல் எழுதப்பட்டிருந்தன.
படித்தது ஆங்கில இலக்கியமென்றாலும் 42
சதவிகிதமே வாங்கி பார்டரில் பாஸான கடைசி பெஞ்ச் மாணவன் நான். இன்றுவரை
ஆங்கிலத்தை சற்று அச்சத்தோடே எதிர்கொள்வதால் ஆங்கிலத்தில் வந்த மெயில்களுக்கு இதுவரை
பதில்போடமுடியவில்லை.
ஆங்கில மெயிலர்களுக்கு நான் சொல்லவிரும்புவது இதுதான்.
‘தங்கமே
தமிழுக்கில்லை தட்டுப்பாடு. இனியாவது ப்ளீஸ் மெயிலை தமிழில் தட்டிப்போடு.
’எங்கே என் சிநேகா?’ என கதையின் நாயகி தேடும் வேலை தீவிரமடைந்திருக்கும்
வேலையில், விரக்தியின் விளிம்புக்கே சென்று நான் கண்டடைந்த உண்மை, சென்னையில், இளம்பெண்களில்
தற்போது சுமார் 63 சதவிகிதம் பேர் முழுக்கை உறை அணிந்து, முகத்திரை மாட்டி ‘ட்விங்’
எனும்படி ரெண்டு கண்கள் முழிக்கும் உருவமாகவே வாகனங்களில் பறக்கிறார்கள். அவிங்கள நாம
சைட் அடிக்கமுடியாதே ஒழிய, அந்த ‘ட்விங்’ முழிகளால் அவர்கள் அடிக்கிற சைட் அய்யய்யோ
அதீத வெட்கத்தால் நானே பலமுறை தலைகவிழ்ந்திருக்கிறேன்.
’இப்படி தேடும் கண்பார்வை தவிக்க’ அலைந்துகொண்டிருக்கும்
வேளையில் சுமார் மூன்று தினங்களுக்கு முன்பு நண்பர் இசையமைப்பாளர் இரா.பிரபாகருடன்
இசைக்கோர்ப்பு பணியில் இறங்கியிருக்கிறோம். ‘சிநேகாவின் காதலர்கள்’ எழுத்துவடிவம் ஒருவழியாக
இப்படி உறுதியாகிவிட, வரும் வெள்ளியன்று தினத்தந்தி, தினகரன்களில் ‘இசைஞானியின் திசைவணங்கி
இன்னையிலருந்து தந்தத்தானன்ன்ன’ என்ற வாசகங்களுடன் நம் படவிளம்பரம் வெளியாகிறது. இசைஞானியின்
பிறந்தநாளான இன்று என் நண்பர்களுடன் இதைப் பகிர்ந்துகொள்வதில் ராஜாவின் வெறிகொண்ட ரசிகர்களுல்
ஒருவனாக பெரும்மகிழ்வு அடைகிறேன்.
இயக்குனர் ஆனதால் ‘ஓஹோபுரடக்ஷன்ஸ்’-ல் பதிவுகள் எழுதுவதிலிருந்து
இம்மியளவும் பின்வாங்கமாட்டேன். ஏனெனில் என்னையும் எனது நண்பர்கள் பலரையும் கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்’ இடம் இது.
படத்தின் கதை, நட்சத்திரங்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் இத்யாதிகள்
குறித்து கண்டிப்பாக தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே செய்வேன். குறிப்பாக இந்தப்படம்
குறித்து கிசுகிசு மன்னன் தமிழ்சினிமாவின் அண்ணன் அந்தண்ணன் உட்பட யாரும் கிசுகிசுக்களே
எழுதமுடியாது. ஏனெனில் நம் படம் குறித்த கிசுகிசுக்களை நானே ஜனங்களிடம் சரண்டர் பண்ணிவிட
உத்தேசம்.
கடந்த வெள்ளியன்று மிக மும்முரமாக கம்போஸிங் நடந்துகொண்டிருந்தது.
கவிதையாக இருந்த ஒன்றை பாடலாக மாற்றும் முயற்சியில் அரும்பாடுபட்டு ப்ரபா கணிசமான வெற்றியடைந்திருந்தார்.
நல்ல விசயம் நடக்கும்போது அதைத் தட்டிக்கொடுத்து கொண்டாடவேண்டியதுதானே தமிழர் மரபு.
அலுவலகம் விட்டு அவசரமாக வெளியே சென்று, பத்து நிமிடம் கழித்து திரும்பி வந்து ஒரு
காஸ்ட்லியான பாதாம்பருப்பு டப்பாவை ப்ரபாவிடம் கொடுத்தேன். ஆர்வத்தோடு திறந்து பார்த்தவருக்கு
அதிர்ச்சி. உள்ளே 200கிராம் பட்டாணி. [அந்த
பாதாம்பருப்பு ஒரு நண்பர் சிலநாட்களுக்கு முந்தி தந்த அன்பளிப்பு]
’’உலக சினிமாவுல இதுக்கு முந்தி எந்த ஒரு டைரக்டரும், நல்ல
டியூன் போட்டதுக்காக, மியூசிக் டைரக்டருக்கு பட்டாணி டப்பாவை பரிசாக்குடுத்ததாக வரலாறே
இல்லை. உன்னோட சினிமா வரலாறு இந்த எடத்துல ஸ்டார்ட் ஆயிடுச்சிய்யா’’ என்றார் ப்ரபா
மனசுக்குள் மருகியபடி.
மனசுக்கு இருந்த ரோசம் நாக்குக்கும் பல்லுக்கும் இல்லை. மறுநாள்
மாலை அந்த டப்பா காலியாகியிருந்தது.
’மதுரைக்காரய்ங்கள்லாம் ரோசக்காரய்ங்கன்னு யாருங்க சொன்னது?’