Thursday, December 29, 2011

    குமுதத்தில் என் முதல் நாளும் மாலனின் கடைசி நாளும்
    
சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்புவரை இந்த ப்ளாக்’குகள் குறித்து யாராவது பேச ஆரம்பித்தால் அது ஏதோ ஒரு
’காத்து கருப்பு’ சமாச்சாரம் போல என்று கருதி, ஒரு எட்டடி தள்ளி நிற்பேன்.


 இப்போது விதிவசத்தால் நானாக
வலியவந்து மாட்டிக்கொண்டேன்.


 கடந்த மூன்று நாட்களாக எதுவும் எழுத முடியவில்லை எனும்போது கொஞ்சம்
சலிப்பாக இருக்கிறது.


 எந்த பத்திரிகையைத் திறந்தாலும் ‘கொலவெறி’செய்தியே முன்னால் வந்து நிற்கிறது.

நேற்று
ரத்தன் டாடாவுடன் விருந்து சாப்பிட்ட தனுஷ், இன்று இந்திய மற்றும் ஜப்பானிய பிரதமர்களுடன் விருந்து
சாப்பிடுகிறார் என்று விழுந்துவிருந்து எழுதுகிறார்கள்.
நமக்கெல்லாம் விருந்து கொடுக்க யாருமில்லை என்ற
வயித்தெரிச்சலுடன், பழைய சோறும் பக்கோடாவும் சாப்பிட்டபடியே நான் கேட்கிறேன்,

’’ஒரு கொலவெறி’
ஹிட்டுக்காக இந்தியா முழுக்க இத்தனை இடங்களில் விருந்து சாப்பிட்டீர்களே தனுஷ், இதன் பிறகாவது உங்களால் ஒரு
நூறு கிராம் ஆவது வெயிட் ஏறமுடிந்ததா? இப்போதும் அதே முப்பத்து மூனுகிலோ முன்னூறு கிராம்தானே நீங்க?

சரி,நம்ம கதையே நாறிக்கெடக்கு. ஊர்க்கதை நமக்கெதுக்கு?
என் கதை எழுத ஆரம்பிக்கிறப்ப தொடக்கத்திலெயே நான் சொல்லியிருந்தமாதிரி,எங்க ஆரம்பிச்சி
எது வழியா போறதுன்னு இன்னும் விளங்கலைதான்.  குமுதம்’ ஆபிஸ் பக்கம் நான் இவ்வளவு
சீக்கிரம் வந்திருக்கக்கூடாது. அவங்க ரொம்ப கோவமா இருக்கங்க.


 அண்ணன் நக்கீரன் கேபால் கூட இருந்த மூன்றரை வருஷங்கள மறக்க
முடியுமா? ‘சத்திரியன்’ நடத்தி பட்ட கஷ்டங்களை,50 ஆயிரம் பிரதிகள் வித்த பத்திரிகைக்கு பூட்டு போட்டதை
எழுதாம இருக்க முடியுமா?

ஆனாலும் இதுக்கு முந்தின சாப்டர்ல  அறிவிச்சிட்டோமேங்கிற ஒரே காரணத்துக்காக குமுதத்தை எட்டிப்பாத்துட்டே வெளிய போவோம்....
...ஒரு கேபினைக்காட்டி உள்ளே போகச்சொன்னார்கள். அங்கே மாலன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்
அல்லவா?

 இதற்கு முன்பு மும்பையில்’ போல்டு இந்தியா’ என்றொரு தமிழ் தினசரி,நக்கீரன்’உட்பட ஏழெட்டு
பத்திரிகைகளில் குப்பை கொட்டியிருந்த நான் ஒரு ஆசிரியர், அதுவும் ஒருகாலை  வேலை நேரத்தில், இவ்வளவு
கம்பீரமாக தூங்கியதை அதுவரை பார்த்ததில்லை என்பதால் சற்று அதிர்ச்சிதான் அடைந்தேன்.

 இவரை எப்படி எழுப்புவது? நமக்கு ‘குமுதம் ‘ஓபனிங்கே ரொம்பக்கேவலமா இருக்கே என்னசெய்வது என்று விழித்துக்
கொண்டிருந்தேன். என் கையிலிருந்த என்குறிப்பு ஃபைலை அவரது டேபிளில் வைத்தேன். அவரது சங்கீத
குறட்டைக்கு முன்னால் நான் ஃபைல் வைத்த சத்தம் கொசு குறட்டை விடுவது போல் பிசுபிசுத்தது.

லேசாக கனைத்துப்பார்த்தேன். கச்சேரி மேலும் களை கட்டியதே தவிர மாலன் எழுந்திருக்கிறபாடாயில்லை.

சரி, ஊருக்கு கட்டின பொட்டிபடுக்கைய பிரிக்காமதான வந்திருக்கோம்.ஆனது ஆகட்டும் என்று சற்று
சத்தமாகவே எழுப்பினேன். ரெண்டு கண்களும் விஜயகாந்தாய் சிவந்திருக்க எழுந்தார் மாலன்.

எதிரில் ஒருஜந்து எதற்காக உட்கார்ந்திருக்கிறது என்பது அவருக்கு
தெரிவிக்கப்படவில்லை என்பதை உடனே புரிந்து கொண்டேன்.

‘’ரிப்போர்ட்டர் வேலைல ஜாயின் பண்றதுக்காக இன்னைக்கு வரச்சொல்லியிருந்தாங்க.’’
இதற்குள் எனது தன்குறிப்பு அவர் கைக்கு போயிருந்தது.சற்று நேரம் பார்த்துக்கொண்டே இருந்தவரின்முகம் இறுக்கமாகியது
.

’நக்கீரன்ல குமுதத்தையும்,பிராமிண்ஸையும் அடிக்கடி திட்டி எழுதுறது நீங்களும்’ துரையும்தான்னு சொல்லுவாங்க
. பிறகு எந்த முகத்த வச்சிக்கிட்டு இங்க வேலைக்கு வர்றீங்க?’’இது மாலன்.
கேள்வி நியாயமானதுதான் என்றும், இது எல்லாம் தெரிந்தேதான், மணா என்னை அழைத்து வந்தார் என்றும் .நான்
அவரிடம் வேலை கேட்டுப்போகவில்லை. குமுதத்துக்கு புள்ள புடிக்கும் வேலையின் ஒரு பகுதியாகவே
மணா என்னை அழைத்து வந்ததையும் நான் சொல்லமுயல, அதை அரைகுறையாகக் கேட்டுவிட்டு,
‘இங்க ஒரு ப்ரூப் திருத்துறவர் வேலைதான் பாக்கி இருக்கு.அதுக்கு ஒகேன்னா சொல்லி அனுப்புறேன்’என்றபடி என்னை வெளியே அனுப்பினார்.
.
அதற்கு முன், பத்திரிகை நிருபராக.இணை ஆசிரியராக, ஆசிரியராக  நான் எதுவும் சாதிக்கவில்லை எனினும் மாலன்
அளவுக்கு நான் மங்குனி இல்லை.

 இன்று எங்கு பார்த்தாலும் தமிழ் உணர்வாளர்கள் பொங்கி வழிகிறார்கள்.
ஆனால் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சமயம்.புலிகளுக்கு ஆதராவாக செய்தி வெளியிட்டால் ஏழு
ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று அரசு அறிவித்திருந்த போது, நான் ஆசிரியராக இருந்த’சத்திரியன்’
 பத்திரிகையில் நெடுமாறன் அவர்களை’ வைத்து  ‘மாவீரன் பிரபாகரன்’ என்றதொடரை வெளியிட்டவன் நான். அதனால்தான் சொன்னேன் நான் மாலன் அளவுக்கு மங்குனி இல்லை.

‘ப்ரூப்’ திருத்தும் பணி சாதாரண பணி இல்லை .ஆனால் அதை மாலன் சொன்ன பாணி,எனக்குள் கொந்தளிப்பை
உண்டாக்கியது.

கேபினை விட்டு வேகமாக வெளியே வந்து மணாவைத்தேடினேன்.

[கொஞ்சம் கருணை காட்டுங்கள். எனக்கும்
மாலனுக்குமான கட்டப் பஞ்சாயத்தை நாளை அல்லது மறுநாள்  கண்டிப்பாக முடித்து விடுகிறேன். ]
                    **********************************************************************
நண்பர்களுடன் இன்னொரு முக்கியமான செய்தியை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.தொடர்ந்து
எழுதச்சொல்லி உற்சாகப்படுத்தும் நண்பர்களுக்கு நன்றி.ஆனால் நான் சொந்தமாகத்துவங்கியிருக்கும் வெப்சைட்’
பணிகள் என்னைத் தின்றுதீர்க்கின்றன.

 ப்ளாக் பொழுதுபோக்கு என்றால் அது பொழப்பு.இதுவரை நிறைய பேருக்கு
நிறைய நிறைய உழைத்து சம்பளம் அனுபவிக்காமல் வந்த சவலைப்பிள்ளை நான்.

காரை சம்பளமாக வாங்க வேண்டிய இடத்தில்
நான் வெறும் சைக்கிளோடு திரும்பிய கதைகள் ஏராளம்.

இப்போதுதான் முதன்முறையாக எனக்கே எனக்கு என்று
ஒரு வெப்சைட் துவங்கியிருக்கிறேன். அதன் முகவரி hellotamilcinema.com.இனி இதில் நிறைய எழுதுவேன்.’ப்ளாக்’கில்
கொஞ்சமாக எழுதுவேன்.

2 comments:

  1. சரவணா ஸ்டோரில் எல்லாம் கிடைக்கும் …
    இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் சரவணா ஸ்டோரில் சலூன் ஆரம்பித்து மூணுரூபாய்க்கு முடிவெட்டி விடுவதாக நண்பன் சொன்னான்..
    அப்புறம் நம்ம மாலன்சார் கதை ஏன் இடையில் நிற்கிறது … சீக்கிரம் முடிங்க முத்து..

    ReplyDelete