Monday, January 9, 2012

சந்தித்தேன் ‘நக்கீரன்’ கோபாலை- என் கதை5

      இப்போது அனைவரிடமுமே  கடிதங்கள் எழுதுகிற பழக்கம் அறவே இல்லாமல் போய்விட்டது.

 நான் மும்பையில் இருந்தபோது ஒரு நாளைக்கு பத்து கடிதங்களாவது நண்பர்களுக்கு எழுதிக்கொண்டிருந்தேன். அதே அளவிலோ இன்னும் சற்று அதிகமாவோ எனக்கும் நண்பர்களிடமிருந்து தினமும் கடிதங்கள் வந்துகொண்டேயிருக்கும்.

கடிதங்களில் இலக்கியம்,சினிமா சொந்தக்கதை சோகக்கதைகள்‘கே.ரங்கராஜுன்னு ஒருத்தர் படம் பண்ணிக்கிட்டிருக்காரு .அவரு நம்ம மல்லாங்கிணறுதான்’’ என்று போகும்.

நான் போல்டு இந்தியாவில் சேர்ந்து இரண்டாவது வருடத்தை நெருங்கிக்கொண்டிருந்தவேளையில், நாஞ்சில் நாடனின் உன்னத இலக்கியங்களுல் ஒன்றான ‘மிதவை’ நாவல் வெளிவந்திருந்தது.

மும்பையில் பொதுவாக தமிழர்களும், அவரது நாயகனும் படும்பாட்டை படிக்கிறவர்கள் கண்கள் குழமாகும்படி பதிவு செய்திருந்தார் நாஞ்சில் நாடன்.

.அதைப்படிக்க நேர்ந்த என் நண்பர்கள் என் மேல் பரிதாபப்பட்டு ,அடுத்து எழுதத்துவங்கிய ஒவ்வொரு கடிதத்திலும், கிளம்பி ஊருக்கு வா.இங்கு உனக்காக ஏகப்பட்ட வேலைகள் காத்திருக்கின்றன என்று என்னை மும்பையை விட்டு கிளப்புவதிலேயே குறியாக இருந்தனர்.

சரி, மும்பைக்கு பிறகு போய்க்கொள்ளலாம். இப்போதைக்கு அண்ணன் நக்கீரன் கோபாலிடம் போவோம்.
விருதுநகரிலிருந்து கோபாலின் சொந்த ஊரான அருப்புக்கோட்டை வெறும் அரைமணி நேரப்பயணம்தான். மதுரை போய் செளபாவைப்பார்த்து  விட்டு பிறகு கோபாலை சந்திக்கலாம் என்று பார்த்தால், ‘அண்ணன்  உடனே மெட்ராஸ் கிளம்புறார். கூடவே வாங்க’ என்றார்கள் வந்திருந்தவர்கள்.
 எனக்கு அதற்கு முன்பு கோபாலோடு எந்தவித பரிச்சயமும் இல்லை.
 என்னை மும்பை வேலைக்கு அனுப்பிய ‘பேசும் விழிகள்’ பாக்கெட் நாவலை நடத்திய ரத்தினபாண்டியன் மட்டும் கோபாலைப்பற்றி ஒன்றிரண்டு தகவல்களை சொன்னதாக ஞாபகம்.
 அருப்புக்கோட்டை சென்று முதன்முதலாக அவரது வீட்டில் அவரை சந்தித்த போது ஒரு பத்திரிகை முதலாளிக்கான எந்தவித பந்தாவும் இல்லாமல்,மிக எளிமையாக இருந்தார்.கலகலப்பாக பேசினார்.அதுவரை வெளிவந்திருந்த மூன்று நக்கீரன்’ இதழ்களை எனக்குத்தந்தார்.
ஜுனியர் விகடன் செளபா கிட்ட மதுரை சவுத் ஏரியா பாத்துக்கிறதுக்கு ஒரு ரிப்போர்ட்டர் வேணும்னு நானும் எடிட்டர் துரையும் கேட்டப்ப அவர் உங்களை சிபாரிசு பண்ணார். வொர்க் பண்றீங்களா தம்பி? என்று கேட்டவுடன்,  நான் வேறொரு நண்பர் மூலம் ‘தினமலர்’ போக இருப்பதாக தெரிவித்தேன்.
அவர் அடுத்த பத்தாவது நிமிடம் தினமலர் ஏன் வேண்டாம் என்று பேசி  என்னை கன்வின்ஸ் செய்தார்.
 ‘அப்ப என் கூடவே மெட்ராஸ் வந்திங்கன்னா நம்ம எடிட்டரப் பாத்துட்டு, ஐ.டி. கார்டையும் வாங்கிட்டு நீங்க உடனே வேலையை ஆரம்பிச்சிடலாம்’’ என்றார் கோபால். ‘என்னடா இது விரட்டி விரட்டி வேலை குடுக்குறாங்களே என்று நினைத்தபடி,
நான் மும்பையிலிருந்து திரும்பியிருந்து ஓரிரு தினங்களே ஆகியிருந்ததால் நண்பர்களை சந்திக்க ஏங்கிப்போயிருந்தேன். எனவே ஒரிரு தினங்களில் மெட்ராஸ் வருவதாகச்சொல்லிவிட்டு, அவ்வாறே சென்றேன்.எக்மோரில் இறங்கி கீழ்ப்பாக்கம் கார்டன், நக்கீரன்’ அலுவலகம் நெருங்கி கதவை நெருங்கியபோது ‘’அண்ணே இனிமே அப்பிடி செய்ய மாட்டேன். என்னை அடிக்காதீங்க’’ என்று ஒரு கதறல் குரல் கேட்டது.[தொடர்வேன்]

No comments:

Post a Comment