Friday, January 27, 2012

ராம நாராயணனின் ஏழரையாம் அறிவும் ‘போதை தர்மனும்’

சினிமாவில் மற்ற எல்லாவற்றையும் தாண்டி ‘ஐடியாவுக்கு’ தான் துட்டு என்று ஒன்று சொல்வார்கள்.இது ’அருந்ததி’ போன்ற பல சமயங்களில் முன்னாள் இயக்குனர் ராமநாராயணனுக்கு பொருந்தும். சில சமயங்களில் இதே ஐடியாவால் அவர் துட்டு அவரை விட்டுப்  போனதும் உண்டு.

நேற்று ஃபோர் ஃப்ரேம்ஸில் ‘போதிதர்மன்’ படத்துக்கான பத்திரிகையாளர் காட்சியைப்போட்டுவிட்டு, சீனாவரை போய், அவரே இயக்கி விட்டு வந்தது போல் கைகுலுக்கல்களை வாங்கிக்கொண்டிருந்தார்.

நானும் என் பங்குக்கு, பாங்காக்கில் இருக்கிற டைரக்டர் டோனி சிங்குக்கு கேட்டு விடவா போகிறது என்ற தைரியத்தில், ‘’ சார் அப்பிடியே நீங்க டைரக்ட் பண்ணுன மாதிரியே இருக்கு சார்’ என்று மன சாட்சியை, கேவலம் ஒரு போண்டா, காபிக்காக அடமானம் வைத்துவிட்டுதான் வந்தேன்.

‘ஹாலிவுட் நிறுவனமான இண்டோ ஓவர்சீஸ் ஃபிலிம்ஸ் தயாரித்த ஜெட் லீயின்’ A WHITE SNAKE REVENGE'  என்ற படத்தை தனது எட்டாவது அறிவைப் பயன்படுத்தி ‘போதி தர்மன்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்  ராமநாராயணன்.

உலகமெங்கும் தமிழனுக்கு பெருமை சேர்த்த போதிதர்மனின் சிஷ்யப்பிள்ளையாம் ஜெட்லீ. நம்ம போதி அவர்களை மானசீக குருவாக ஏற்று சீன மக்களை நோய் நொடி,மற்றும் பேய் பிடிகளிலிருந்து  எப்படி மீட்கிறார் என்பதை நம்ம ராமநாராயணன் பாணியில் பாம்பு, எலி, ஆமை போன்ற மிருகங்களின் உதவியுடன் ஆனால் பெரும் பிரமிப்பை ஏற்படுத்தும் சண்டைக்காட்சி, மற்றும் கிராபிக்ஸ் உத்திகளுடன் இயக்கியிருக்கிறார் டோனிராமநாராயணசிங்.

பேய்,பிசாசு,வவ்வால் பூதங்களை தன் மந்திரசக்தியால் மாயக்குகைக்குள் அடைத்து வைத்திருக்கும் ஜெட்லீயின் சிஷ்யன், மூலிகை இலைகளைப்பறிக்கப்போன இடத்தில் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் வெள்ளை நாகக்கண்ணியிடம் ஒரு முத்தம் வாங்கி அவள் மேல் பித்தம் போதை பிடித்து அலைகிறான்.வெள்ளை நாகக்கண்ணியின் தங்கை பச்சை நாகக்கண்ணி இவர்கள் காதலுக்கு தூது போகிறாள். அவள் ஒரு நாகக் கன்னி அவளோடு நீ சேர்ந்து வாழ முடியாது என்று குரு சொல்வதை ஏற்காமல் அவன் சந்திக்கும் சோதனைகள்,கிராபிக்ஸ் சாதனைகள் தான் ’போதிதர்மன்’.

ஒரு முத்தம், ஒரே ஒரு முத்தம் என்னோட மொத்த வாழ்க்கையையும் மாத்திபோட்டிருச்சி பாத்தியா? ‘மேகத்திற்கும் தாகம் உண்டு,நாகத்திற்கும் காதல் உண்டு’ டப்பிங் படத்துக்கும் நல்ல கலெக்‌ஷன் உண்டு’  போன்ற வசனங்களில் ராமநாராயண டச் தெரிகிறது.

ஏவல்,பில்லி சூனியங்களில் நம்பிக்கையுள்ளவர்கள், கையில் கொறிக்க நாலு தானியங்களை வைத்துக்கொண்டு இந்தப்படத்தைப் பார்க்கலாம்.

படித்து கண் கலங்க ஒரு பின்குறிப்பு;

ரைட் சைடுல வில்லனுக்கு பஞ்ச் குடுத்திட்டிருக்காரே இவர நல்லா பாத்துக்கங்க. இவர ஏன் நாங்கபாக்கணும்னு உங்களுக்கு ஒரு கோவம் வரும். வரணும்.

ஒரு பத்து செகண்ட் பாக்கச்சொன்னதுக்கே உங்களுக்கு இம்பூட்டு கோவம் வருதே, ரெண்டே கால் மணி நேரம் ஃபைட்டு, பாட்டு, டூயட்டுன்னு இவர் பண்ணுன அட்ராசிட்டிகளைப் பாத்த எனக்கு எப்பிடி இருக்கும்?

அண்ணனோட பேரு, ஒரு எலி ரெண்டு எலி அஞ்சலி மாதிரி, ஒரு ஸ்டாரு,பவர்ஸ்டாரு,...செவன் ஸ்டாருஜீ.கே. ‘இன்னைக்கி ரிலீஸாகியிருக்க ‘தேனி மாவட்டம்’ படத்தோட ஹீரோ.

போன வாரமே இந்தப் படத்தைப் பார்த்து தாங்க முடியாம அழுதுட்டேன். மத்த எல்லாத்தையும் கூட, கர்ஷீப்பை கடிச்சி அழுது பொறுத்துக்கிட்ட எனக்கு, ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நினைச்சா இன்னும் அழுகை பொத்துக்கிட்டு வருது.நான் அழுக, அதைப்பாத்து நீங்க அழுக, வேணாம் அபிராமி விட்டுருவோம்னுதான் நினைச்சேன். ஆனா முடியலை.

ஒரு  காட்சி, அண்ணன் செவன்ஸ்டாரு, தன்னொட காதலியைக் கலாய்க்கிறதுக்காக, அவ ஃபிரண்டுகிட்ட போய், ஒரு பொண்ணோட போட்டோவக் காட்டி,’’இந்தப்பொண்ண எனக்கு புடிச்சிருக்கு. அவளுக்கு என்னப்புடிச்சிருக்கான்னு கேட்டுச் சொன்னீன்னா, நான் அவளையே கட்டிக்கிறேன்’ என்கிறார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும், தோழி, அண்ணனைப்பார்த்து உலகமே அதிர்ச்சியில் உறைய வேண்டிய ஒரு டயலாக் பேசுகிறார்,

’’ என்னண்ணே இப்பிடி கேட்டுட்டீங்க. இந்த பூமியில பொண்ணுன்னு பொறந்த எவளுக்காவது உன்ன புடிக்காம போகுமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்.........





5 comments:

  1. அய்யய்யோ முடியல பாஸ்!
    பெரிய கமென்ட் போடணும்னு நினச்சேன்!
    கண்ணீர் கண்ணை மறைக்குது!
    படம் பாக்க போறவன எப்புடியெல்லாம் பழிவாங்குறாய்ங்க!

    ReplyDelete
  2. /*இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும், தோழி, அண்ணனைப்பார்த்து உலகமே அதிர்ச்சியில் உறைய வேண்டிய ஒரு டயலாக் பேசுகிறார்,

    ’’ என்னண்ணே இப்பிடி கேட்டுட்டீங்க. இந்த பூமியில பொண்ணுன்னு பொறந்த எவளுக்காவது உன்ன புடிக்காம போகுமா?
    அவ்வ்வ்வ்வ்வ்வ்.........*/

    ரொம்ப நாள் கழிச்சு வாய் விட்டு சிரிச்சேன் சார்!! நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி. நான் எழுதி எவ்வளவோ நாள் ஆச்சி.

      Delete