Thursday, January 12, 2012

'நண்பன்'-விமர்சனம். யாரைப்பாத்தாலும் ஜட்டியோட அலையிறாங்க...



சற்றுமுன்னர் தான் பிரசாத் லேப் தியேட்டரில், ராஜ்குமார் ஹிரானியின்நண்பன்பார்த்து விட்டு வந்தேன்.ஷங்கரின் நண்பன் என்று எழுதும்படி எனக்குத்தெரிந்து படத்தில் அவர் ஒன்றுமே செய்யவில்லை.’ஏங்க ஒரு குத்துப்பாட்டுல நாலஞ்சி ஷாட்ல நான் வந்துட்டுப்போனேனே? என்று ஷங்கர் கேட்பாரேயானால்அந்தக்குத்துப்பாட்டே ஒரு வெத்துப்பாட்டு என்பதுதான் என் பதில்.

'Fivepoint Someone' என்ற நாவல் 2009 ல் ஹிந்தியில், ‘த்ரீ இடியட்ஸ்ஆகி வசூலில் பல ரெகார்டுகளை உடைத்து, இப்போது தமிழில் நண்பனாகியிருக்கிறது.
 ஒரு படம் அதுவும் த்ரீ இடியட்ஸ்மாதிரி தரமான ஒரு படம் மொழி மாற்றம் செய்யப்படும்போது,முலப்படத்தின் ஜீவன் சிதைந்து போகாமல் அதை மொழிமாற்றம் செய்வது ஒரு சவால்.
99சதவிகித படங்கள் இந்த சவாலில் தோற்றே வந்திருக்கின்றன. எஞ்சினீயரிங் படிப்பை விட அது கஷ்டம். ஷங்கர் அதில் என்ன ஆனார் என்று கடைசியில் பார்ப்போம்.

கதை அனைவருக்கும் தெரிந்தநடைமுறையில் இருக்கும் கல்வி அமைப்பை தலையில் குட்டும் கதைதான். குழந்தை கருவில் இருக்கும்போதே, ஆம்பளைப்பிள்ளைன்னா எஞ்சினீயர் ,பொம்பளைப்பிள்ளைன்னா டாக்டர் என்று பெற்றோர்கள் தீர்மானம் செய்து அதை பிள்ளைகள் தலையில் திணிக்கும் வழக்கத்தை நையாண்டி பண்ணும் அதே இந்தியை சொற்ப சில மாற்றங்களுடன் தமிழ்ப்படுத்தியிருக்கிறார் ஷங்கர்.

ஐந்து வருடங்களாக தலைமறைவாகிபோன நண்பன் விஜயைத்தேடி ஸ்ரீகாந்தும், ஜீவாவும், அவர்களுடன் காமெடி பீஸ் சத்யனும் போகிறார்கள். ஊட்டியில் அவர் இருப்பதாகச்சொல்லப்பட்ட பங்களவுக்குள் போனால்,விஜயின் பெயரில் எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார். விஜய் படித்தது, சர்டிபிகேட் வாங்கியது எல்லாம் சூர்யாவின் பெயரில் இருக்கிறது. பெரிய கோடீஸ்வரன் வீட்டுப்பிள்ளை சூர்யாவுக்காக  அவர்கள் வீட்டு வேலைக்காரன் பிள்ளை  விஜய்  எஞ்சினியரிங் டிகிரி வாங்கிக்கொடுத்துவிட்டு அவர்களுக்கு வாக்களித்தபடி ஊரை காலிசெய்துவிட்டு போயிருப்பது அறிந்து, அவரை சந்திக்க அவரது காதலி இலியானாவையும் அழைத்துக்கொண்டு ஓடுகிறார்கள். இந்த பயணத்தின் தங்கள் கல்லூரி வாழ்க்கையின்போது, தங்க்ளுக்கு மகத்தான பாதையைக்காட்டிய நண்பன் விஜயைப்பற்றி ஸ்ரீகாந்த் விவரிப்பதுபோல் கதை விரிகிறது.

இந்திப்பட காட்சிகளே போதும்போதும் என்று சொல்கிற அளவுக்கு தரமாகவும் சுவாரசியமாகவும் இருந்ததால், ஆர்வக்கோளாறில் அந்தக்காட்சியில் சிறிய மாற்றங்களை ஷங்கர் செய்யாதது படத்தின் மிகப்பெரிய பலம்.படத்தின் மற்றொரு யாணை பலம், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. இவர் பெயரைப்பார்த்தவுடன் ஏதோ இந்திக்காரர் என்று நினைத்து விடாதீர்கள். நம்ம ஊர் பரமுதான் கொஞ்சம் ஸ்டைலாக இருக்கட்டுமே என்று ஹம்சாவை  சேர்த்துக்கொண்டிருக்கிறார்.

‘’.ஆர் ரகுமானோட அப்பா, அவரை கிரிக்கெட் கத்துக்கச்சொல்லி கட்டாயப்படுத்தி,...டெண்டுகரோட அப்பா அவரை மியுசிக் டைரக்டர் ஆகச்சொல்லி கட்டாயப்படுத்தி இருந்தா என்ன ஆயிருக்கும்?’
’’ரெண்டு காலும் உடைஞ்ச பிறகுதான் சொந்தக்கால்லயே நிக்கக்கத்துக்கிட்டேன்’’..போன்ற சுவாரசியமான வசனங்கள் அங்கங்கே படத்தை மேலும் சுவாரசியப்படுத்துகின்றன.வசனம்; மதன்கார்க்கி மற்றும் ஷங்கர் என்று போடுவதால் ஆளுக்கு தலா அரைக்குட்டு.

வேறு வழியில்லை இந்தப்படத்தை இந்திப்படத்தோடு ஒப்பிடும்போது , அநியாயமாய் நாம் தோற்றுப்போய் நிர்கதியாய் நிற்கிற இடம் நடிப்பு.
ஆமிர்கான் அளவுக்கு நாம் விஜயிடம் எதிபார்ப்பது சத்தியமாக விஜயின் தப்பு இல்லை. ஆனால் ஒரு தடவைக்கு பத்து தடவைத்ரீஇடியட்ஸ்கேஸட்டைப்போட்டுப்பார்த்து சத்யன் எஞ்சினியரிங் படித்த மாதிரி கொஞ்சம் மக்கப் பண்ணியிருக்கலாம்.
இன்னும் மோசம் ஜீவாவும், ஸ்ரீகாந்தும்.தங்களது அமெச்சூர்த்தனமான நடிப்பின் மூலம் நம்மை கதையை விட்டு வெளியே நகட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.சரி, ரேக்கிங் காட்சிகளுக்காக படத்தில் பேண்டைக்கழட்டி ஜட்டியைக்காட்டுகிறார்கள் என்று பார்த்தால், படம் முழுக்க யாராவது ஒருவர், வேறு யாராவது ஒருவருக்கு ஜட்டியைக் காட்டிக்கொண்டேயிருக்கிறார்கள்.
இலியானா சில காட்சிகளில் தேவதை போலவும் ,சில காட்சிகளில் தேவை கொஞ்சமாவது சதை என்பது போலவும் இருக்கிறார்.[ விஜய் இவரை கிண்டல் பண்ணுவதற்குமுனீம்மாஎன்ற பேரை அடிக்கடி யூஸ் பண்ணுகிறார். முனீம்மாஎன்ற பெயரில் உள்ளவர்கள் எம்பேரு உனக்கு அவ்வளவு எளக்காரமா போச்சா என்று விஜயுடனோ ஷங்கருடனோ சண்டை போடலாம்.]

என் ஃபிரண்டைப்போலஹார்ட்டிலே பேட்டரிஆகிய இரண்டு பாடல்களும் பரவாயில்லை ரகம். பின்னணி இசையில் பல இடங்களில் சொதப்பித்தள்ளியிருக்கிறார் ஹாரிஸ். பின்னணி இசைக்கும் கூட சி.டி.கள் சந்தையில் சல்லிசாக கிடைக்க ஆரம்பித்துவிட்டன என்ற தகவலை மெல்லிசாக அவர் காதில் போட்டு வைத்தால் நல்லது.

படம் மூன்றே கால் மணி நேரம் ஓடுகிறது. வழக்கமான படங்களில் வருகிற க்ளைமேக்ஸுக்கு முந்தின குத்துப்பாட்டையாவது தவிர்த்திருந்தால், குத்து மதிப்பாக இரண்டு கோடி பணமும் நேரமும் மிச்சமாகியிருக்கும்.

நண்பன்கண்டிப்பாக விஜய்க்கு வசூல் ரீதியாக ஒரு வெற்றிப்படம் தான்.ஆனால் இந்தியில் பார்த்தபோது வாவ் என்று வாயைப்பிளந்ததில் பாதியைத்தான் தமிழில் பிளக்கமுடிகிறது.’நண்பன் மனிதன் பாதி, மிருகம் பாதி.

ஒரு மனித நேயம் கலந்த பின்குறிப்பு;


என்னதான் 60கோடி, 70 கோடிக்கு படம் எடுத்தாலும்ஜெமினி குடும்பத்தைச்சேர்ந்த இந்த குட்டிப்பசங்க ரெண்டு பேரும் ரொம்ப வருஷமாவே, ஜட்டியைத்தாண்டி வேற எந்த டிரெஸ்ஸும் கிடைக்காம அல்லாடுதுங்க.யாராவது ஆளுக்கு ஒரு சட்டை, டவுசரு வாங்கிக்குடுத்தா உங்க தலைமுறைக்கே புண்ணியமாப்போகும்





4 comments:

  1. கலக்கல் விமர்சனம் அருமை

    ReplyDelete
    Replies
    1. இதை போய் கலக்கல் விமர்சனம் னு சொல்றீங்களே...

      Delete
  2. worst Review sir...Sorryyyyy,,,Sir,. .5 years ila sir, , 10 years ah searching sir. .padatha innoru thadava parunga .. . neenga oho nu varuveenga...

    ReplyDelete
  3. //ஐந்து வருடங்களாக தலைமறைவாகிபோன நண்பன் விஜயைத்தேடி//
    பத்து வருடம் ...உங்கள் விமர்சனம் ஒன்று கூட நல்லாவே இல்லை ...ஏன் வந்தோம் என்று தோணுகிறது...

    ReplyDelete