Monday, February 27, 2012

இந்தப்படத்த பாத்த நீங்க, இதுக்கு மேலயும் உயிரோட இருக்கனுமா?

’பாஸ் கடந்த ரெண்டு வாரமாவே, ஒரு தினுஷா,  பேயறைஞ்ச மாதிரியே காட்சி அளிக்கிறீங்களே, இதுக்கு ஏதாவது விஷேச காரணம் இருக்கா ?’ இப்படி   என்னைப்பார்த்து யாராவது கேட்க மாட்டார்களா என்று  ஒரு விதமான ஏக்கமே வந்துவிட்டது எனக்கு.

என் எல்.கே.ஜி. பொடியன் சந்தோஷ் தான் முதலில் கண்டுபிடித்தான். ‘ டேய் நந்து நம்ம டாடிக்கு என்னமோ ஆயிப்போச்சிடா. ஒரு ஐஸ்கிரீம் எக்ஸ்ட்ரா கேட்டதுக்கெல்லாம் ஓவரா கோபப்படுறாரு.நமக்கு ஐஸ்கிரீம் வாங்கித்தர்றதுக்கு தானடா அவங்க டாடி நம்ம டாடியைப் பெத்தாரு’

இந்தக்காலத்து சிறுசுகள் இப்படியெல்லாம் பேசவில்லை என்றால் தான் ஆச்சரியப்படவேண்டும்.

என்னை அறைந்தது ஒரு பேயல்ல, நான் கடந்த பத்து நாட்களாக பார்த்த படங்களின் எண்ணிக்கையை வைத்து என்னை அறைந்த பேய்களின் எண்ணிக்கையை நீங்களே கூட்டிக்கழித்து பெருக்கிக்கொள்ளலாம்.

’ சூழ்நிலை’ என்று ஒரு படம். நமது சூழ்நிலை சரியில்லை என்று எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காமல் அப்பட பி.ஆர்.ஓ. மேஜர்தாஸன் வற்புறுத்தி அழைத்துப்போய் தியேட்டருக்குள் நம்மை ஒரு இரண்டு மணி நேரத்துக்கு சூழ்நிலைக்கைதி ஆக்கினார்.வாழ்க்கை மீதிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் அப்பட இயக்குனர் செந்தூரன் போக்கினார்.

அடுத்து, ‘விளையாட வா’ என்று ஒரு படத்துக்கு அழைத்தார்கள். கல்லூரி காலங்களில் கேரம் ஆடுவதில் பல மாதங்கள் பைத்தியமாக இருந்தேன். இது முழுக்கமுழுக்க கேரம் விளையாட்டைப்பற்றிய படம் என்று ஒரு பெட்டிச்செய்தி படித்திருந்ததால் ஆசையோடு போனேன். படம் ஆரம்பித்த ரெண்டாவது நிமிடமே, நான் படித்தது பெட்டிச்செய்தி அல்ல. எனக்காகவே எழுதப்பட்ட  சவப்பெட்டிச்செய்தி என்பதைப்புரிந்துகொண்டேன்.

 வடிவேலு காமெடியில் வரும் வாள மீன் கிடைக்குது, வஞ்சிர மீன் கிடைக்குது ஆனா ஜாமீன் மட்டும் கிடைக்கல மாதிரி கேரம் போர்டில் ஸ்கொயர் கட்டிங் தெரிந்து வைத்திருக்கிறார்கள்... சிசர்ஸ் கட்டிங் தெரிந்து வைத்திருக்கிறார்கள்... ஆனால் ஃபிலிம் கட்டிங் என்ற ஒன்றை மட்டும் சுத்தமாகக் கோட்டை விட்டுவிட்டார்கள்.

இதற்கு அடுத்து வெளியே சொன்னா வெக்கக்கேடு என்கிற மாதிரி’விருதுநகர் சந்திப்பு’ சிவகாசி மத்தாப்பு, ராஜபாளையம் கித்தாப்பு’ எண்று  மேலும் நான்கு படங்கள். நான்கு படங்கள் என்றவுடன் ‘நான்கு சாரல் ஒரு மழை’ என்ற அருவா மனை படம் ஞாபகத்துக்கு வருகிறது.இந்தப்பட புரஜக்‌ஷன் போது ரீலுக்கு ஒருவராய் தலை தெறிக்க ஓடியவகையில் ஆறாவது ரீலில் ஆபரேட்டர் மட்டும் தனி ஆளாய் சாரலில் கண்ணீர் ஆறாய் ஓட நனைந்து கொண்டிருந்தார்.

இந்தக்கொடூரங்களுக்கு நடுவே, காட்டுப்புலி’ ஒன்றை வேட்டையாட வந்த அர்ஜுன் நடுக்காட்டில், வெரி  பேட் ஸ்மல்’  வரும்படி ஒரு புளிக்குழம்பு மட்டுமே வத்துவிட்டுப்போனார்.

கடைசியாய் நம்மை கருணைக்கொலை செய்ய வந்த படம் ‘காதல் பாதை’. மன்சூர் அலிகான் படத்தில் நடித்திருப்பது தெரிந்திருந்தால் நான் அந்த தியேட்டர் இருக்கும் தெரு வழியே கூட போயிருக்க மாட்டேன்.விதி நம்மை சும்மா விடுமா?

மேற்படி படங்கள் எதனுடைய கதையையும் சொல்லி உங்களை அவஸ்தைப்படுத்தவில்லை என்ற உரிமையில்’காதல் பாதை’யின் கதையை மட்டும் ஒரு இரண்டு வரி சொல்லி விடுகிறேன். ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியை  பணக்கார ஹீரோயின் காதலிக்கிறார்.ஹீரோயின்  வீட்டில் அனுமதியில்லை. உடனேஹீரோ ஹீரோயினை கொடைக்கானலிலிருந்து  ஒரு சைக்கிளில் அழைத்துக்கொண்டு காதல் சின்னமான தாஜ்மஹாலைக் காட்டிவிட்டு ஹீரோ சாக கூடவே ஹீரோயினும் சாக , இதுக்கு மேல இந்தப்படத்த பாத்த நீங்க  உயிரோட இருக்கனுமா? என்ற கேள்வியுடன் நம்மை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் 'die'ரக்டர்.

இத்தனை அவஸ்தைகளையும் ஒத்தை ஆளாய் தாங்கிக்கொண்டு விமரிசனம்கிமரிசனம் என்று எதுவும் எழுதாமல் இருந்த நான்,  ரொம்ம்ம்ம்ப நல்லவன்ங்கிறதை நீங்க இப்பவாவது புரிஞ்சிக்கிட்டா சரி.


6 comments:

  1. உங்க கட்டுரைகள் எல்லாமே படிக்க சுவையா இருக்கு. நிருபரா இருந்து கொண்டு எப்படி இவ்வளவு வெளிப்படையா எழுதறீங்கன்னு ஆச்சரியமாவும் இருக்கு. தொடர்ந்து எழுதவும்.

    ReplyDelete
  2. இன்னும் 10 படம் சேர்த்து பார்த்திருந்திகன்னா அவ்வளவுதான் போல...


    சிறிப பட்ஜெட் என்ற பெயரில் எந்த ஒரு விஷயமும் இல்லாமல் வந்து விட்டு பார்பவர்களின் உயிரை எடுக்குறாங்க....

    கதையை நம்பி சினிமாவுக்கு வந்த புதுமுகங்கள் இனியாரும் இல்லை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்...

    இதனாலதான் விமர்சனங்கள் படிச்சிட்டு நான் படத்துக்கு போறது....

    ReplyDelete
  3. ‘ டேய் நந்து நம்ம டாடிக்கு என்னமோ ஆயிப்போச்சிடா. ஒரு ஐஸ்கிரீம் எக்ஸ்ட்ரா கேட்டதுக்கெல்லாம் ஓவரா கோபப்படுறாரு.நமக்கு ஐஸ்கிரீம் வாங்கித்தர்றதுக்கு தானடா அவங்க டாடி நம்ம டாடியைப் பெத்தாரு’

    Excellent statement!

    ReplyDelete
  4. நீங்க.. ரொம்ப, ரொம்ப நல்லவர்ண்ணே..! ஒத்துக்குறேன்..!

    ReplyDelete
  5. உங்களுக்குமாண்ணே.. நான் இப்பத்தான் சனிக்கிழமைஅன்னைக்கு புலம்புனேன்.

    ReplyDelete
  6. omg, what a trragedy in last week...... cool sir wait for kochadaiyan...

    ReplyDelete