Friday, March 2, 2012

'அரவான்’ வசூலில் விரைவில் குறைவான்




2009-ம் தேதி ஜூலை 11ம் தேதி பின்னிரவு உறக்கம் பிடிக்காமல் மன அழுத்தத்தில் அரட்டிக்கொண்டிருந்தேன்.இந்த நூற்றாண்டை விட்டு பறந்துவிடத் துடிக்கும் வேகம் உடலெங்கும் நிறைந்திருந்தது.நூறு சேனல்களில் மனம் லயிக்காமல், தொலைக்காட்சியை அணைத்துவிட்டு தரையை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன்.


என் இரண்டு வயது மகன் ஆடும் மரக்குதிரை காற்றில் ஆடியபடி இருந்தது.அதன் காலடியில் வாசிக்கத்துவங்கி,பாதியில் விட்டிருந்த சு.வெங்கடேசனின் ‘காவல்கோட்டம்’ நாவல் இருந்தது.வாசிக்க ஆரம்பித்த ஒரு சில மணித்துளிகளில் நாவலில் படித்த ஒரு சம்பவம் தான் ‘அரவான்’ கதை.

அரவானின் பிறந்த நாளும் என் பிறந்த நாளும் அன்றே ஜூலை12.2009.

நூற்றாண்டின் திரைச்சீலை விலக்கி
மழையில் நனையும்
கனவொன்றுடன் வருகிறான் அரவான்.


- ‘அரவான்’ பட அழைப்பிதழில்’ ஆல்பம்’ பட  இயக்குனர் வசந்த பாலன். [நம்ம ஆளுங்க கிட்ட ஓப்பனிங் எப்பவுமே நல்லாத்தான் இருக்கு ]

தமிழ் சினிமாவில் நெடுங்காலம் தொட்டே கதாசிரியர்களுக்கான,அதுவும் இலக்கியவாதிகளுக்கான, சரியான அங்கீகாரத்தைக் கொடுப்பதில்  சினிமாக்காரர்களில் பெரும்பாலானவர்கள் மொள்ளமாரித்தனமாகவே நடந்துகொண்டிருக்கிறார்கள்.

நாஞ்சில் நாடனின் ‘தலைகீழ்விகிதங்கள்’ நாவலை ‘சொல்ல மறந்த கதை’என்று எடுக்கிறபோது, அந்த நாவலையும் அதை எழுதியவரின் பெயரையும் இருட்டடிப்பு பண்ண ,படம் எடுப்பதற்கு எடுப்பதைவிட அதிக பிரயத்தனம் எடுத்துக்கொள்கிறார்கள்.இதுபோன்
ற இருட்டடிப்பு கதைகள் நூற்றுக்கும் மேல் சொல்லலாம்.அந்தப்பஞ்சாயத்து அப்புறம்.

அந்த வகையில் நாவலாசிரியர்களுக்கு தனது படங்களில் பெரிய முக்கியத்துவம் தந்து வருபவர் வசந்த பாலன். கடந்த ஆண்டு சிறந்த நாவலுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற சு.வெங்கடேசனின்,’காவல் கோட்டம்’ என்ற 1057 பக்க நாவலில் சுமார் 47 பக்கத்தை மட்டும் வசந்தபாலன் தன் படத்துக்கான கதையாக எடுத்துக்கொண்ட கதையே அரவான்’.

 எப்பப்பாத்தாலும் நாமே படத்தின் கதை என்ன என்று ஏன்  எழுத வேண்டும் என்று யோசித்ததில், எழுத்தாளர் சு. வெங்கடேசன் வார்த்தைகளிலேயே கதை என்ன என்று பார்ப்போம்.

. நம்முடைய தமிழ்ப் பாரம்பரியத்தின் மரபில் நல்ல களவாணியை காவல்காரனாக நியமித்திருக்கிறார்கள். தமிழ் மரபின் விஷயம் அது. 1812 இல் கிழக்கிந்திய கம்பெனி கையில் ஆட்சி இருக்கும்போது அவன்தான் ஒரு சிஸ்டத்தை உருவாக்குகிறான். கிராமக் காவல்காரர்களை நாம் என்ன செய்வது என்ற கேள்வி அப்போதுதான் வருகிறது. அப்போது என்ன சொல்கிறார்கள் என்றால்... கிராமத்தைப் பற்றி எல்லா விஷயங்களும் தெரிந்த ஒரே ஆள் அவன்தான். அவனை விட்டுவிட்டு ஒரு அமைப்பை ஏற்படுத்தினீர்கள் என்றால் நம்மால் இந்த சமூகத்தைப் புரிந்துகொள்ளமுடியாது. எனவே இந்த அமைப்பின் அடிநிலை ஊழியனாக அவனைச் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று அவர்களைச் சேர்த்துக்கொள்கி றார்கள். கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் கிராமக் காவல்காரர்களை வில்லேஜ் போலீஸ் என்று அழைத்திருக்கிறார்கள். கையில் ஒரு வில்லையைக் கட்டியிருப்பார்கள். 1812 இல் கொடுத்த அந்த வில்லை என்னிடம் இருக்கிறது. அதன் நடுவில் விபி என்ற ஆங்கிலத்தில் இருக்கும். சுற்றிலும் வில்லேஜ் போலீஸ் என்று போடப்பட்டிருக்கும்’ என்று கதையின் பின்புலத்தைப்பற்றி சொல்கிறார் சு.வெ.
.

அப்படிப்பட்ட வில்லேஜ் போலீஸ்களில் ஒருவரான ஆதியை பலி கொடுப்பதற்காக ஒரு கிராமமே தேடிக்கொண்டிருக்கிறது.  ஒரு பத்து வருடம் தலைமறைவாக வாழ்ந்துவிட்டு வந்தால், மன்னித்து விட்டுவிடுவார்கள் என்று ஆதியின் மாமனார் சொல்ல, ஊரு விட்டு ஊரு வந்து, சின்னா என்ற தன் பேரு விட்டு வேறு பேரு வந்து, பசுபதியின் ஊரில் வாழும் ஆதி, ஒன்பதாவது வருடத்தில் தனது ஊர்க்காரர்களிடம் மாட்டிக்கொண்டு, வித்தியாசமாக உயிரை விட்டு, தெய்வமாகிப்போவதுதான் அரவான்.

‘களவை’ தொழிலாக செய்து வருபவர்களைப்பற்றிய வரலாற்றுக்கதை.அவமானகரமாக நினைக்கவேண்டிய களவு சமாச்சாரத்தை, பொத்திப்பொத்தி சேகரித்து ஏன் வரலாறாகத்திரிக்கிறார்கள் என்பது புரியாத புதிர்.

இப்படி ஒரு கேள்வியை யாரும் கேட்டுவிடக்கூடாது என்று நினைத்தோ என்னவோ, படத்தை திடு திப்பென்று மரண தண்டனைக்கெதிரான படமாக மாற்றி ‘மரண தண்டனையை ஒழிப்போம்’ எ ஃபிலிம் பை வசந்த பாலன்’ என்று முடிக்கிறார்.

ஏன் பிரதர் படமே ஒரு மரணதண்டனையா? கேள்வி கேக்குறது ரொம்ப ஈஸி பிரதர்.எதையுமே அனுபவிச்சிப்பாத்தாதான் தெரியும்.

சமீபகாலமாக தமிழ்சினிமா டைரக்டர்கள் பலருக்கு பீரியட்கதைகளை  படம் எடுக்கும் ஆவல் அதிகரித்திருக்கிறது. அவர்களையெல்லாம் ரசிகர்கள் அதிபுத்திசாலிகளாக நினைத்துக்கொள்வார்கள் என்பது அவர்களின் எண்ணமாக இருக்கிறது.ஒரு கொடுமை என்னவென்றால், இந்த மாதிரி எடுக்கப்படுகிற பீரியட் கதைகளில், பீரியடும் இருப்பதில்லை, கதைகளும் இருப்பதில்லை. சில பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள். வசந்த பாலனின் இந்த ‘அரவானும் அந்த வரவான் தான்.

ஒளிப்பதிவு பற்றி மீடியாக்களில்  மிரட்டலாக வந்த செய்திகள் எதையும் படத்தின் ஒளிப்பதிவு நியாயப்படுத்தவில்லை.இந்த லட்சணத்தில் இவருக்கு இந்த வருடத்துக்கான தேசிய விருதுக்கு வேறு புக் பண்ணி வைத்திருக்கிறார்களாம்.

இந்த ஒரு படத்தில் தான் நமது எதிர்காலமே அடங்கியிருக்கிறது என்று நினைத்தோ, அல்லது கேமராமேன் மாதிரியே நாமளும்  ஒரு தேசிய விருது வாங்கி  அதை ஆளுக்கு பாதியாய் பிரித்துக்கொள்ளலாம் என்று நினைத்தோ,  என்னவோ, ஆதியும், பசுபதியும் நம் உயிரை எடுத்து நடித்திருக்கிறார்கள். இடைவேளைக்கு அப்புறமே வரும் தன்ஷிகாவுக்கு,’இடை’ வேலைகள் மட்டுமே கொடுத்திருக்கிறார் இயக்குனர். அந்த நிலாப்பாடலில் ஆதியும், தன்ஷிகாவும் சேர்ந்து  இளமைக்கு ஒரு விழா எடுத்திருக்கிறார்கள்.

மேலும் சில வித்தியாசமான பாடல்களுடன்  ஆச்சரியம் ஆனால் உண்மை எனும்படி இருக்கிறது பாடகர் கார்த்தியின் இசையமைப்பு. அதிலும் பின்னணி இசையில் கார்த்தி ரொம்பவே நேர்த்தி.வீட்டுல எடுக்கச்சொல்லுங்க ஆரத்தி.

படத்தின் முன்பாதி, அடிபட்டுக்கிடக்கும் ஆதியின் கதையைப்போலவே,ரத்தமும் சகதியுமாக  சற்று குழப்பமாக ஓடினாலும்,பின்பாதியில் சற்று சுதாரித்து ,ஆதியின் நெருங்கிய நண்பன் மகனின் கையிலேயே,ஆதியைக்கொல்ல ஊர்க்காரர்கள் அரிவாள் கொடுப்பது,போன்ற  சில செறிவான காட்சிகளால் திரைக்கதையை சற்று நிமிர்த்தி உட்கார வைக்கிறார் வசந்த பாலன்.

பரத்-அஞ்சலி ஜோடிகள் கவுரவ வேடத்தில் நடிக்க முன்வந்ததை ஒட்டியாவது அவர்களை சற்று கவுரவமாக நடத்தியிருக்கலாம். அவர்களின்  ஐந்து நிமிடக் கதையை, கொத்துபுரோட்டா மாதிரி, பதினைந்து காட்சிகளாகப்பிரித்து கொத்தி எடுத்திருக்க வேண்டாம்.

அதிலும் இடுப்பு ஒட்டியாணம் யாருடையது என்று கண்டுபிடிக்க, ஆதி வேசியின் வீட்டுக்குபோவதும்,அங்கு அந்த வேசி ஆதியின் இடுப்பில் ஒட்டியாணத்தை வைத்துப்பார்த்து, தன்னைக்கட்டிப்பிடித்தவர்களையெல்லாம் ரீவைண்ட் செய்து,அந்த ஒட்டியாணம் ராஜாவுடையது என்று கண்டுபிடிப்பதும்,நாவலில் இருந்ததா,அல்லது வசந்தபாலன் இடுப்புஒட்டியாணம் பார்க்கும் ஆவலில் வைத்ததா என்பது தெரியவில்லை.

அங்காடித்தெருவோடு ஒப்பிடும்போது, வெகு ஜன ரசிகனை ஈர்க்கும் சமாச்சாரங்கள் மிகக்குறைவாகவே இருக்கும் இந்த ‘அரவான்’ வசூலில் விரைவில் குறைவான் தான்.

2 comments:

  1. விமர்சனம் அருமை...

    ReplyDelete
  2. //சமீபகாலமாக தமிழ்சினிமா டைரக்டர்கள் பலருக்கு பீரியட்கதைகளை படம் எடுக்கும் ஆவல் அதிகரித்திருக்கிறது. அவர்களையெல்லாம் ரசிகர்கள் அதிபுத்திசாலிகளாக நினைத்துக்கொள்வார்கள் என்பது அவர்களின் எண்ணமாக இருக்கிறது//அவர்கள் அதி புத்திசாலிகளாக நினைப்பார்கள் என்று நினைக்கிறார்களோ இல்லையோ இந்த மாதிரி எதிர்மறையாக விமர்சனம் பண்ணினால் தான் உங்களை அதிபுத்திசாலிகளாக நினைப்பார்கள் என்று இப்படி எதிர்மறையாக எழுதினீர்களோ என்னவோ?

    \\பரத்-அஞ்சலி ஜோடிகள் கவுரவ வேடத்தில் நடிக்க முன்வந்ததை ஒட்டியாவது அவர்களை சற்று கவுரவமாக நடத்தியிருக்கலாம். அவர்களின் ஐந்து நிமிடக் கதையை, கொத்துபுரோட்டா மாதிரி, பதினைந்து காட்சிகளாகப்பிரித்து கொத்தி எடுத்திருக்க வேண்டாம்\\ பரத் அஞ்சலி நடிக்கிறார்கள் என்பதற்காக ஸ்கிரிப்ட்டையே மாத்தி எழுதச் சொல்றீங்களே உங்கள் அதிபுத்திசாலிதனம் தெரிகிறது.

    mokkai vimarsanam.

    ReplyDelete