Wednesday, March 14, 2012

டிஜிட்டல் கர்ணன்: பாஞ்சாலி பத்தினியா, பரத்தையா?


1964  ஜனவரி 14 அன்று பி. ராமகிருஷ்ணையா பந்துலு  இயக்கத்தில் வெளிவந்த ‘ கர்ணன்’ படத்தின், புதிய தொழில்நுட்ப வடிவமைப்பு படத்தை,  கடந்த திங்களன்று பிரசாத் லேப் தியேட்டரில் பார்த்தேன்.

கொஞ்சம் ஓவராக ’சவுண்டு ‘ விடுகிறார்கள் என்பதைத் தாண்டி, புதிய தொழில் நுட்பம் என்னவென்று படம் பார்த்து புரிந்துகொள்ள முடியாமல், விக்கிபீடியாவில் போய்ப்பார்த்தால் ஆங்கிலத்தில் இப்படி ஒரு விளக்கம் இருக்கிறது.

A digitally restored version of Karnan (with digital enhancements and restored audio to enable its screening in digital cinemas). இதைப்படித்து நான் மேலும் குழம்பியதுபோல் நீங்களும் குழம்பியிருந்தால் மன்னியுங்கள்.

தி.மு. க.பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் பாஷையில் சொல்வதானால்,’புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ, புரியாதவன் போயிக்கோ’ என்று அடுத்த விஷயத்தை நோக்கிப்போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

சுமார் 47 வருடங்களுக்கு அப்புறம் வெளியாகும் இப்படத்திற்கு நம் அண்ணன்மார்கள் எப்படியும் விமர்சனம் எழுதி நடிகர்திலகத்தின் நடிப்பை,அசோகன்,முத்துராமன், சாவித்திரி ஆகியவர்களின் நடிப்பை வியப்பார்கள் என்பதால், நான் அந்த விமர்சன ஏரியா பக்கம் தலை காட்ட விரும்பவில்லை.அதனால்  இது கர்ணன்’படவிமர்சனம் இல்லை. நீங்கள் கர்ணகொடூரத்துக்கும் ஆளாக வேண்டியதில்லை.

 ‘உயர்ந்த மனிதன்’  மாதிரி படத்தோடு ஒப்பிடும்போதெல்லாம், இதில் சிவாஜி, அசோகன் நடிப்பெல்லாம் வெறும்  மொக்கை தான். படத்தில் கத்துக்குட்டித்தனமான காட்சிகளும் ஏராளம்.

அதுவும் அசோகனாகிய துரியோதனின் மனைவி பானுமதியின் மடிக்கச்சையைப் பிடித்து சிவாஜியாகிய கர்ணன் இழுத்தையெல்லாம் என்னால் அசோகனைப்போல் சாதாரணமாக எடுத்துக்கொண்டு, ‘எடுக்கட்டுமா, கோர்க்கட்டுமா? என்று கேட்கத்தோன்றவில்லை. அவர்கள் இருவரும் முழிக்கிற திருட்டு முழி, துரியோதனனுக்கு தெரியாமல் ,கர்ணனும் பானுமதியும் ,  எதோ ‘கள்ளாட்டம்’ ஆடியிருப்பார்கள் என்பதாகவே படம் முழுக்க  எனக்குத்தோணுகிறது.

ஒரிஜினலில் இருந்ததை விட இப்போது பத்து நிமிடங்கள் ட்ரிம் பண்ணி மூன்று மணி நேரமாகப் படம்  ஓடுகிறது.

ஒரு முனிவரின் இச்சைப்படி, சூர்யபகவானுக்கு குழந்தை கர்ணனைப்பெற்றெடுக்கும் கேடி லேடி குந்தி தேவி, அந்தக்குழந்தையை ஆற்றில் விடுவதில் தொடங்கி, முதல் பாதி,அர்ஜுனன் அன் கோஷ்டி, துரியோதனன் அன் கோஷ்டி, பீஷ்மர்,சகுனி மாமா, கண்ணன் மாமா, திருதிராஷ்டிரர், தலைவிரிகோலமாக அலையும் பாஞ்சாலி,  நம்ம தமிழ்சினிமா அந்தணனுக்கு மட்டுமே வித்தை கத்துத்தருவேன்’ என அழிச்சாட்டியம் பிடிக்கும் முனிவர் ,என்று சுமார் நூறு கேரக்டர் வகையறாக்களை அறிமுகம் செய்ய தொகையறா பாடியதிலேயே முடிந்து போவதால்,லேசாகக் கொட்டாவி  மாதிரி ஒரு கெட்ட ஆவி வருவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இலக்கியங்களில் பாஞ்சாலிக்கு கொடுத்த முக்கியத்துவம் ஏன் இந்தப்படத்தில் தரப்படவில்லை என்பது புரியவில்லை. அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் கணக்காக, எங்க கிட்டரெண்டு பாக்கெட் ஷாம்பு வாங்குனா அஞ்சு கிராம் சோம்பு இலவசம் என்பது மாதிரியே பல இடங்களில் வசனம் எதுவுமின்றி விசனத்தோடே நிற்கிறார்.

ஆனால், ‘’என்னவோய் சவுக்கியமா? ‘என்று கண்ணனைப்பார்த்து சகுனி கேட்டவுடன், ’இந்த லோகத்துல நம்ம ரெண்டு பேர் சவுக்கியத்துக்கு என்ன குறை வந்துடப்போகுது? என்று கண்ணன் கண்ணடிப்பதில் சூடு பிடிக்கும் இரண்டாவது பாதியை லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு கதை பண்ணி  மாற்றினால் பத்து மங்காத்தா வசூலைப்பார்க்கலாம்.ஒரு நூத்தியோரு ரூபாய் அட்வான்ஸ் எடுத்து வையுங்கள் .அதுக்கு நான் கியாரண்டி.

கதையை சொன்னால் கண்டிப்பாக சுட்டுவிடுவீர்கள் என்பதால், மாற்றப்போகும் கதையில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சில கேரக்டர்களை என் மனக்கண்ணில் ஓட்டிப்பார்த்தேன்.

கர்ணனாக கர்னல் லெப்டினண்ட். டி.ராஜேந்தர் [ அந்த கவச குண்டலங்களோடு இவரைக் கற்பனை ’பன்னி’ப் பாருங்கள். இவரது குண்டலங்கள் மட்டுமே எட்டு மண்டலங்களுக்கு பேசும்.. அர்ஜுனனாக முத்துராமனுக்குப் பதில் ஜே.கே.ரித்தீஸ். துரியோதனனாக அசோகனுக்குப்பதில், பவர்ஸ்டார் சீனுவாசன்,அசோகன் மனைவி பானுமதி பாத்திரத்தில்’ இந்த உடை போதுமா என்று கேட்கிற காஷ்ட்யூமில் த்ரிஷா,கர்ணன் டி.ஆருக்கு ஜோடியாக ‘மீண்டும் நயன் தாரா,குந்தி வேடத்தில் குஷ்பூ, பாண்டவர்களின் கடைக்குட்டி சகாதேவனாக நம்ம குறளரசன், கலகம் விளைவித்து பல கேம் நடத்தும் கண்ணனாக அண்ணன் ராமராசன்.

இது சும்மா சாம்பிள்தான்.அட்வான்ஸுக்கு அடுத்த அமவுண்ட்,அதாவது சைடிஷ்’ வாங்குவதற்கு நீங்க இன்வெஸ்ட் பண்ணத்தயாராகும்போது, பட்டய கிளப்பும் பல விஷயங்கள் கிளம்பும்.

ஃப்ளாஷ்பேக் 1:

1983 என்று நினைக்கிறேன். சாத்தான்கள் நடமாட்டம் எதுவுமின்றி, நியூஸ் பேப்பர்களில் நல்ல  விஷயத்துக்காக மட்டுமே அப்போது பெயர் அடிபட்டுக்கொண்டிருந்த  எங்கள் அமெரிக்கன் கல்லூரிக்கு, எழுத்தாளர் ஜெயகாந்தன் வந்திருந்தார். எங்கள் கல்லூரி பாடத்திட்டத்தில் அவரது,’ பாரிஸுக்கு போ’ உள்ளிட்ட சில நாவல்கள் எப்போதும்  இருந்தன. அதனால் மாணவர்களுக்கும் அவருக்குமிடையில் ஒரு சந்திப்பு நடத்தினால்அவர்களுக்கு பயனுள்ளதாக  இருக்குமே என்று திட்டமிடப்பட்டே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.முதல் இரு தினங்கள் அவரது ‘யாருக்காக அழுதான்’ ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ போன்ற ஒரு சில படங்கள் எங்களுக்காக திரையிடப்பட்டு, பின்னர் கடைசி நாளில் அவரது ஒரு பேச்சு. இறுதியாக மாணவர்கள் அவரிடம் கேள்விகள் ஏதாவது இருந்தால் கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.[ இந்த ஏற்பாடுகளையெல்லாம் தமிழாசிரியர் சுதானந்தா செய்திருந்ததாகவே எனக்கு ஞாபகம்.]

ஜெயகாந்தன் எழுத்தின் சுவாரஸ்யம் அவரது பேச்சிலும் நூறுசதவிகிதம் இருக்கும் என்பது அவரைப்பற்றிக் கேள்விப்பட்டவர்களுக்கு கூட தெரிந்திருக்கும்.அது தெரியாமல், எங்கள் மாணவர்களில் ஒருவர் அவரை மடக்கும் நோக்கில், ‘’ஐயா ஐந்து ஆண்மகன்களைத் திருமணம் செய்து கொண்டாளே  பாஞ்சாலி, அவள் பத்தினியா, பரத்தையா ? என்று யாரும் எதிர்பாராமல் ஒரு போடுபோட்டார்.

பதில் சொல்ல ஜே.கே. நொடியும் யோசிக்கவில்லை.

‘பத்தினியின் மகனுக்கு அவள் பத்தினி. பரத்தையின் மகளுக்கு அவள் பரத்தை’
.
ஜெயகாந்தனிடமிருந்து இந்த பதில் வந்ததும் கேள்வி கேட்ட மாணவரைத்தேடிய போது, அவர் ஆவியாகி அந்த இடத்தில் இல்லாமல் இருந்தார்.

25 comments:

  1. நட்சத்திர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கலக்கல் பிளாஷ்பேக்

    ReplyDelete
  3. நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  4. தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவலை ஜெயகாந்தன் எழுதியது என்று எழுதிய உம்முடைய ஞானம் எம்மை புல்லரிக்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்க கால் பெருவிரலைத் தொட்டு வணங்கி மன்னிப்புக் கோருகிறேன். பயபுள்ளக்கி வயசயிருச்சில்ல.. அதான் டங் ஸ்லிப்

      Delete
  5. அண்ணே!

    உங்களுக்கு ஐம்பது வயசா? :-(

    ReplyDelete
    Replies
    1. [ யுவ] கிருஷ்ணா உன் திருவிளையாடலுக்கு ஒரு அளவே இல்லையா? உள்ளத்தில் நல்ல உள்ளத்துக்கு வயசாகாதென்பது வல்லவன் வகுத்ததடா, யுவா வருவதை எதிர்கொள்ளவா...

      Delete
  6. //இதில் சிவாஜி, அசோகன் நடிப்பெல்லாம் வெறும் மொக்கை தான். படத்தில் கத்துக்குட்டித்தனமான காட்சிகளும் ஏராளம்.// நீங்க அஜீத் ரசிகரா சார்?

    ReplyDelete
    Replies
    1. அப்பிடீன்னு சொன்னா அஜீத் கோவிச்சுக்குவார். எங்க கதைய நாளைக்கு எழுதுறேன்

      Delete
    2. விமர்சனத்துக்கு நன்றி!

      Delete
  7. கலக்கலான போஸ்ட்டு.. சில இடங்களில் சிரிச்சி சிரிச்சி.. இந்த பதிவை கூகிள் பிளஸில் பகிர்ந்துகொண்ட அண்ணன் சென்ஷிக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்க ஆபிஸுக்கு வந்தா ஒரே நேரத்துல நாலஞ்சி டீ கிடைக்கும் போல இருக்கேண்ணா.

      Delete
  8. கலக்கல் பதிவு.
    நீங்க கற்பனை செஞ்ச கேரக்டர்களை வச்சி ஒரு படத்தை யோச்சி பார்த்தேன்.....முடியல, கற்பனையே படு பயங்கரமா இருக்கு. அப்படி ஒரு படம் வந்தா கண்டிப்பா எந்திரன் வசூலை முறியடித்து விடும்.
    ஃப்ளாஷ்பேக் 1, இதுக்கு முன்னாடி எங்கயோ படிச்சு இருக்கேன் (பாக்கியா கேள்வி பதில்ன்னு நினைக்குறேன்). அது உங்க கல்லூரியில நடந்த நிகழ்ச்சியா ??? அருமை பாஸ்.

    ReplyDelete
  9. உங்களுக்கு அபாரமான கற்பனைத்திறன் சார்! சினிமாவுல இருக்கிங்கள? :))

    ReplyDelete
    Replies
    1. நான் எங்கே இருக்கேன்னு எனக்கே தெரியலையே...

      Delete
  10. அசோகன் மனைவிய நடிச்சது பானுமதி இல்லிங்கோ... சாவித்திரி...!!!!!!

    ReplyDelete
  11. மணிரத்னம் இந்த மாதிரி ஏதாவது கதை எழுதிவச்சிருப்பார்...

    ReplyDelete
    Replies
    1. தளபதி இப்பிடி சுட்டதுதான?

      Delete
  12. i did see the movie last week. but i m very sad to say that i couldnt enjoy much. i actually needed a translation!! i had to stay for the whole movie because the parking guy said i wont be able to take my vehicle out!!

    ReplyDelete
  13. I like your comments in a very jolly mood even though I was in disturbances.Your writings make me an excitement and refreshment .VAAZHUKKAL. for your kalakkls. VAAZHGA VALAMUDAN.
    by DK., (D.Karuppasamy.)

    ReplyDelete
  14. //சாத்தான்கள் நடமாட்டம் எதுவுமின்றி, நியூஸ் பேப்பர்களில் நல்ல விஷயத்துக்காக மட்டுமே அப்போது பெயர் அடிபட்டுக்கொண்டிருந்த எங்கள் அமெரிக்கன் கல்லூரிக்கு...., //

    :(

    ReplyDelete